நேயர் கார்த்திகா கேட்டதுபோல் தற்போதெல்லாம் தாலியின் அளவு 10,15…என்று 50வரை வந்துவிட்டது!
தாலி என்பது திருமணத்தின் போது ஆண் பெண்ணுக்கு கட்டும் ஒருவகை கழுத்து சங்கிலி ஆகும். தாலி அணிந்த பெண் திருமணமானவள் என்பது தாலியின் முக்கிய குறியீடு. தாலி கட்டும் வழக்கம் இந்து திராவிட மக்களிடம் காணப்படுகிறது.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவர் பேரா.தொ.பரமசிவன் எழுதிய ”பண்பாட்டு அசைவுகள்” என்ற புத்தகத்தில் இருந்து சில குறிப்புகள்:
-
1. தாலி – என்ற சொல்லின் வேர்ச்சொல்லை இனங்காண முடியவில்லை.
-
2. நமக்கு கிடைக்கும் தொல்லிலக்கியச் சான்றுகளிலிருந்து (சங்க இலக்கியம், சிலப்பதிகாரம்) அக்காலத்தில் தாலி கட்டும் பழக்கம் இருந்ததில்லை என்றே தோன்றுகிறது.
-
3. தமிழர் திருமணத்தில் தாலி உண்டா இல்லையா என்று தமிழறிஞர்களுக்கு மத்தியில் 1954-ல் ஒரு பெரிய விவாதமே நடந்தது. இதைத் தொடங்கி வைத்தவர் கண்ணதாசன். தாலி தமிழர்களின் தொல் அடையாளம்தான் என வாதிட்ட ஒரே ஒருவர் ம.பொ.சி மட்டுமே!
-
4. ‘கி.பி. 10-ம் நூற்றாண்டுவரை தமிழ்நாட்டில் தாலிப் பேச்சே கிடையாது’ – வரலாற்று ஆய்வறிஞர் அப்பாத்துரையார்.
-
5. ‘பழந்தமிழர்களிடத்தில் தாலி வழக்கு இல்லவே இல்லை’ – பெரும்புலவர் ஆய்வறிஞர் மா. இராசமாணிக்கனார்.
-
6. கி.பி. 7-ம் நூற்றாண்டில் திருமண சடங்குகளை ஒவ்வொன்றாகப் பாடுகின்ற ஆண்டாளின் பாடல்களில் தாலி பேச்சே கிடையாது.
-
7. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் தோண்டி எடுக்கப்பட்ட புதைபொருள்களில் இதுவரை தாலி எதுவும் கிடைக்கவில்லை.
-
8. கி.பி. 10ம் நூற்றாண்டிற்கு பிறகே தமிழகத்தில் பெண்ணின் கழுத்துத்தாலி புனிதப் பொருளாகக் கருதப்பட்டு வந்துள்ளதாக கொள்ளலாம்.
-
9. இந்திய சிந்தனையாளர்களில் தந்தை பெரியார்தான் முதன்முதலில் தாலியை நிராகரித்துப் பேசவும், எழுதவும் துவங்கினார். அவரது தலைமையில் தாலி இல்லாத் திருமணங்கள் நடைபெறத் தொடங்கின.
-
10. பின்னர், 1968-ல் அண்ணா காலத்தில் நிறைவேற்றப்பட்ட சுயமரியாதைத் திருமணச் சட்டம் தாலி இல்லா திருமணத்தைச் சட்டபூர்வமாக அங்கீகரித்தது
-
11-ஆம் நூற்றாண்டில் கச்சியப்பரால் இயற்றப்பட்ட கந்தபுராணத்தில் தான் திருமணத்தின்போது தாலி கட்டப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

தாலி கட்டிய பின் நாய் போல் நடத்துவதற்கும், நாய்க்கு தாலி கட்டுவதற்கும் என்ன வித்தியாசம்?... பாருங்கள் மணமகனின் மகிழ்ச்சியை!!??
பழந்தமிழர் யார்? அவர்கள் எப்படி இருந்தார்கள் என்பதைப் பற்றி நமக்கென்ன கவலை. அது இன்று அறிவுக்குப் பொருந்துமா? என்று கேட்டு, தாலி அடிமையின் சின்னம் என்றார் தந்தை பெரியார்.
பெண்ணிய பார்வையில் ஆண்கள் தாம் திருமணமானவர் என்பதை வெளிப்படுத்த எந்தவொரு குறியீடும் இல்லாமல் பெண்ணிடம் தாலி, குங்குமம், மெட்டி என்று குறியீடுகளைத் திணிப்பது ஒர் ஆண் ஆதிக்க (male chauvanism) செயற்பாடாக தற்போது சில முற்போக்கு எண்ணமுடையவர்களினால் பார்க்கப்படுகிறது.
இப்படி பல விடயங்கள் வரலாற்றில் உள்ளபோதும் அவற்றை எல்லாம் ஒரு அறிவுக்காக அறிந்து கொண்டு நாம் இப்போ நிகழ்கால நிகழ்வுக்கு வருவோம்.
தற்போது கல்யாணத்திற்கு தாலிக்கொடி செய்வதை ஒரு போராட்டம் என்றே கருதவேண்டும். காரணம்
அவர் 10 பவுனில் போட்டுவிட்டார் நான் 15 பவுனில் போடவேண்டும்…
இன்னும் ஒரு விடயம், சிலர் தமது மகளின் கல்யாணத்திற்கு என்று வெளிநாட்டில் இருந்து இந்தியா சென்று, மகளுக்கு தாலி கட்டுவதுடன், தாய் தானும் ஒரு புதுத்தாலி கட்டி வருபவர்களும் இருக்கின்றனர்!
இங்கு மற்றொரு விடயத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும். அதாவது தமிழ் நாட்டில் என்னதான் பணக்காரர்கள் என்றாலும் அவர்கள் மஞ்சள் கயிற்றில் தான் தாலி கட்டுவார்கள். அப்போதுதான் மூன்று முடிச்சு போடமுடியும்! எப்படி இலங்கையில் பவுனில் தாலிக்கொடி கட்டும் வழக்கம் வந்ததோ தெரியவில்லை.
ஒருவிதத்தில் பார்த்தால் தாலியோ, நகைகளே ஒருவகையில் சொத்துச் சேர்ப்பது போன்றதுதான். ஒரு அவசரத்திற்கு உடனே காசாக்கல்லாம். இலங்கையில் கையில் காசில்லாத போர் சூழலில் உள்ள மக்கள் தமது நகைகளையும், ஏன் தாலிக்கொடியையும் விற்று தமது அன்றாட செலவை செய்தனர்.
இதைவிட சமுகத்தில் ஒரு அந்தஸ்த்து என சம்பத்தப்பட்டவர்கள் கருதுவதும், அழகு என எண்ணுவதும் காரணமாக இருக்கல்லாம். பார்ப்பதற்கு கண்ணுக்கு நிறைந்த காட்சியும் தானே!
சரி இதோ கீழே ஒரு கண்ணுக்கு நிறைந்த காட்சி!

இவ்வளவு நகைகளை அணிந்து நடமாட மணப்பெண் கொஞ்சம் வாட்டசாட்டமாகவும் இருக்கவேண்டும்!
ஜூன் 17, 2009 at 7:25 முப
வணக்கம்,
கில்லாடியாக இருக்கிரீர்கள், எதுக்கும் நன்றி நல்ல விடயங்களை தருகிரீர்கள். எதுக்கும் நீங்கள் அறிந்த தனிப்பட்ட அனுபவங்களை அறியத் தாருங்கள், தனி மாடலில் வரைந்தால் சிறப்பாக இருக்கும். இங்கு நல்ல ஒரு பதிவு இடப்பட்டிருக்கிரது. வாசித்துப் பாருங்கள் சுவாரிசியமாக இருக்கும்.
http://www.yarl.com/forum3/index.php?showtopic=50344
ஜூன் 17, 2009 at 8:44 முப
வணக்கம் கார்த்திகா,
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
மேலும் நல்ல விடயங்களைத் தர முயற்சிக்கின்றேன்.
ஜூன் 18, 2009 at 6:47 முப
பாரதி கணவன் இறந்தால், எமது யாழ்பாண முறைப்படி என்னசடங்கு செய்யப்படுவது உண்டு. சாதாரணமாக தாலிக்கொடியை கழற்றி அவரது உடலின் மேல் வைப்பது வழக்கம். இதை நானும் கண்டு இருக்கிரன் ஆனால் எனக்குச் சில சந்தேகங்கள்
1.தாலிக்கொடி மட்டும் தான் கழற்றி வைக்கப்படுமா இல்லாவிடில் கூரை சீலையும் உடல் மேல் போர்த்தப்படுமா ?
2.கும்குமம், போனற்வற்றை சடங்கு ரீதியாக எடுப்பது உண்டா
3.கணவரின் மரணச் சடங்கின் போது மனைவி என்ன அணிந்து இருப்பார்.
4.சில பேர் வெள்ளைச் சீலை அணிவது உண்டு, அதை ஏப்போது அணிய ஆரம்பிக்கின்றனர். கண்வரது மரணச்சடங்கின் முன்னரா அல்லது பின்னா?
உங்களுக்கு விடயம் தெரிந்தால் கூறுங்கோவன்
ஜூன் 18, 2009 at 12:29 பிப
வணக்கம் கார்த்திகா;
உங்களது கேள்விகளுக்கு பதிலாக,
“பூமுடித்த பூங்குழலியின் பூவை பறிப்பது ஏது…? “என்னும் தலைப்பில் முகப்பில் ஒரு பதிவு எழுதியுள்ளேன்(19ம்திகதி பிரசுரமாகும்). படித்துப்பாருங்கள்.
உங்கள் வருகைக்கும், பதிவுக்கும் நன்றி.